Pages

Sunday, March 24, 2013

உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி?

உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை. 

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும். 

காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவை எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும். 

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும். 

அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். 

சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம். அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும். 

உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 

உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் சர்க்கரை, பருமன் குறையும். உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன, ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது. 

நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம். தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி. 

சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை.

1 comment: