Pages

Monday, May 26, 2014

உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. 
வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. 
பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.. 

* திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு மாதம் வரை, சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் வரை,
 அன்னாசி (முழுசாக) 1 வாரம் வரை, (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். 

* புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் வரை, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வரை, வெள்ளரிக்காய் ஒரு வாரம் வரை, தக்காளி 1-2 நாட்கள் வரை, காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் வரை, காளான் 1-2 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.
 

* வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் வரை, சமைத்த மீன் 3-4 நாட்கள் வரை, பிரஷ் மீன் 1-2 நாட்கள் வரை, ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் வரை, பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் வரை, உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் வரை, பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் வரை, சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனாலும் இறைச்சி வகைகளை தினமும் பயன்படுத்துவது நல்லது.
 

* பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் வரை, பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் வரை, மோர் 2 வாரங்கள் வரை, தயிர் 7-10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.
 

* காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

Saturday, May 24, 2014

நெடுஞ்சாலைகளில் கவனமாக கார் ஓட்டுவது எப்படி?

நாம் கற்றுக்கொள்ளப்போவது என்ன?
இது விடுமுறை சீஸன் என்பதால் பலரும் தங்களுடைய சுற்றுலா பயணங்களை மேற்கொள்வார்கள். குடும்பத்துடன் பயணிப்பதற்குக் கிடைக்கும் ஒரே சமயமும் இதுதான். பலரும் சொந்தமாக கார் வைத்திருப்பதால், விடுமுறை நாட்களில் கிளம்பிவிடுவார்கள். அரசும் இந்த சீஸனில் கூடுதல் பேருந்துகளை இயக்கும். தனியாரும் தங்கள் பங்குக்கு ஆம்னி பஸ்களை களமிறக்குவார்கள். மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழியும். டோல் கேட்டுகளில் மணிக்கணக்கில் எல்லாம் டிராஃபிக் ஜாம் ஆகும். எனவே, சாலை சற்று ஃப்ரீயாக இருந்தாலும் எல்லா வாகனங்களுமே வேகம் எடுக்கும். 
இங்குதான் சிக்கல். அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே மாதிரியான வேகத்தில் செல்வார்கள். இங்கு ஒரு வாகனம் தீடீரென்று பிரேக் போட்டாலும், பின்னால் வரும் வாகனங்களால் சுதாரிக்க முடியாது. இதுமாதிரியான சமயங்களில் நடக்கும் தொடர் வாகன மோதல்களைத்தான் 'Pile-Up' விபத்துகள் என்று அழைப்பார்கள். இந்த டைப் விபத்து நான்குவழிச்சாலைகள் வருவதற்கு முன்னர் மிக மிக குறைவுதான். இந்தியாவின் பிரபல நெடுஞ்சாலையான யமுனா எக்ஸ்பிரஸ்வேயிலும் அவ்வப்போது 'Pile-Up' விபத்துகள் நடப்பதை நாம் கவனிக்க வேண்டும். 
எனவே, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டிச் செல்வது எப்படி?
சில டிப்ஸ்
1. மழை பெய்யும்போது கார் ஓட்டுவதைவிட, மழை பெய்தவுடன் கார் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மழை பெய்தோ/தூறலோ முடிந்தவுடன் தார்ச்சாலையில் மெல்லிய ஃபிலிம் போன்ற லேயராக நீர் படர்ந்திருக்கும். இது சாலையைவிட்டு வழிந்து செல்லாமல் படர்ந்திருக்கும். இதுபோன்ற சாலைகளில் நாம் வாகனத்தை ஓட்டும்போது மிகவும் ஸ்மூத்தாக ஓட்டுவது போல இருக்கும். இந்த சாலைகளில் பிரேக் போடும்போது நிதானம் தேவை. நிதானமாக ஓட்டினால்தான் நிதானமாக பிரேக் போடுவதற்கான நேரமும் நமக்கு இருக்கும். ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியுள்ள வாகனம் என்றால் சற்று தைரியமாக பிரேக் போடலாம். ஆனால், ஏபிஎஸ் இல்லாத வாகனத்தில் பிரேக் போடும்போது கவனம் தேவை. சடர்ன் பிரேக் போடும்போது வீல்கள் ஸ்கிட் ஆகாமல் இருக்க, பிரேக்கை விட்டு விட்டு அழுத்திக்கொண்டே காரை ஸ்டீயர் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஏபிஎஸ் இல்லாத கார்களில், ஸ்கிட் ஆகும்போது பிரேக்கை தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. பிரேக் அழுத்தி எடுத்ததுடன் வளைக்கும்போது கார் உங்கள் கன்ட்ரோலை விட்டு விலகுவது போன்று தோன்றினால், ஸ்டீயரிங்கை எதிர்பக்கம் திருப்பி, கன்ட்ரோல் செய்யுங்கள். காரின் டயர் தேய்மானம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த டெக்னிக் சிறப்பாக கைகொடுக்கும். 

2.
தமிழக நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் சாலை சாதாரணமாகவே வழுக்கலாக இருக்கும். உதாரணத்துக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில வளைவுகளில் இதுபோன்று இருந்தது. இதுபோன்ற வழுக்கலான வளைவுகளை கடக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டு, நிதானமாகக் கடக்கவேண்டும். வளைவு முடிந்த பின்னர் ஆக்ஸிலரேஷன் கொடுத்து செல்ல ஆரம்பிக்கலாம். மழை பெய்யும்போது இந்த மாதிரியான வளைவுகளில் இன்னும் கவனம் தேவை. 

3.
முழுவதும் எடை ஏற்றப்பட்டுள்ள லாரி போன்ற கனரக வாகனங்களால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. ஆனால், இப்போது வரும் வால்வோ இன்டர்சிட்டி கோச் பேருந்துகளில் ஹைட்ராலிக் ரிடார்டர்கள் (Retarder) இருப்பதால், திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தமுடியும். எனவே எந்த விதமாக கனரக வாகனங்களின் முன்னும், பின்னும் தொடர்ந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேர்ந்தால் முடிந்தவரை அந்த வாகனங்களை முந்தி சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களை முன்னே செல்லவிட்டு நாம் பொறுமையாக செல்லவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கனரக வாகனங்களின் பக்கவாட்டில் முந்தும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.கனரக வாகனத்தின் டிரைவர் எக்காரணத்தினாலோ உங்களுடைய லேனில் நுழைய வேண்டியிருந்தால், நீங்கள் பக்கவாட்டில் இருக்கும்போது திணறுவார். நாம் எளிதாக கியர்களைக் கூட்டியோ, குறைத்தோ வேகமெடுத்துச் சென்றுவிடலாம். ஆனால், கனரக வாகனங்களில் வேகத்தைக் குறைத்தால், பழைய வேகத்துக்கு வர அதிக நேரம் ஆகும். அதனால், முடிந்தவரை கனரக வாகனங்களை விரைவாக முந்திச் சென்றுவிட வேண்டும்

4. இன்னொரு வாகனத்தை முந்த ஆரம்பித்துவிட்டு, பின்னர் வேகம் பத்தவில்லையே என்று கியரைக் குறைத்து ஓட்டக்கூடாது. கியரைக் குறைத்தபின்னர்தான், ஓவர்டேக் செய்யவே ஆரம்பிக்க வேண்டும். 

5.
உங்கள் வாகனத்தின் டயர் அதிக தேய்மானம் அடைந்திருந்தால் மழையில் கார் ஓட்டுவதையே தவிர்க்கலாம். 

6.
அளவுக்கு அதிகமான எடையை (பயணிகளும், பொருட்களும் சேர்த்து) காரில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கலாம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படிச் செல்லும்போது வளைவுகளில் சடர்ன் பிரேக் செய்யக்கூடாது. அதேபோல், எடை அதிகம் இருப்பதால், பிரேக் பிடிக்கும்போது வழக்கத்தைவிட சற்று தள்ளியே கார் நிற்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கு ஏற்றார்போல், முன்கூட்டியே பிரேக் செய்து கொண்டுவர வேண்டும். 

7.
நான்கு வழிச்சாலைகளில் தவறான லேனில் ஓட்டுவது இந்தியாவில் மிகச் சாதாரணம். அதுவும் இரவு நேரங்களில், தவறான லேனில் வரும் வாகனத்தின் ஹெட்லைட், அந்த வாகனம் நம்முடைய லேனில் இருந்து வருகிறதா, இல்லை டிவைடருக்கு அந்தப்பக்கம் இருக்கும் லேனில் இருந்து வருகிறதா என்று குழப்பமாக இருக்கும். கவனம் தேவை. 

8.
இரவு நேரங்களில், முன்னே வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தை நேருக்கு நேர் பார்க்கவே கூடாது. இது கண்ணையும் பாதிக்கும் என்பதோடு இல்லாமல், நம்மை அறியாமல் அந்த வாகனத்தின் மீது நேராக ஓட்டிக்கொண்டு இருப்போம். இதற்குக் காரணம் நாம் செய்யும் ஒரு அனிச்சைச் செயல்தான். கார் ஓட்டும்போது நம் கண்ணுடைய 'ப்ரைமரி' பார்வை எங்கு இருக்கிறதோ, நம்மை அறியாமல் அந்தப் பக்கம் நோக்கி, காரை ஓட்டுவோம். எப்போதும் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பார்க்காமல், ஹெட்லைட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில்தான் நம்முடைய 'ப்ரைமரி' பார்வை இருக்கவேண்டும். நம்முடைய 'Peripheral' பார்வைதான் ஹெட்லைட்டை உமிழ்ந்து கொண்டு வரும் அந்த வாகனத்தின்மேல் இருக்கவேண்டும். 

9.
நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக அதிக வேகங்களில் செல்லும்போது, உங்களுடைய வேகம், கனரக வாகனங்களைவிட கொஞ்சம்தான் அதிகமாக இருக்கவேண்டும். தமிழக நெடுஞ்சாலைகளில் தற்போது இருக்கும் டிராஃபிக்கைப் பார்க்கும்போது மணிக்கு 100 கிமீ என்பதே அதிகம்தான். 

10.
சர்வீஸ் லேன்கள் இருக்கும் நெடுஞ்சாலைகளில் இன்னும் கவனமாக செல்லவேண்டும். நான் சொல்லப்போகும் இந்தக் காட்சியை நீங்கள் நிறையப் பார்த்திருக்கலாம். ஊருக்கு வெளியே இருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் வருவதற்கு சர்வீஸ் லேன் தொடங்கும். சில டிரைவர்கள் இந்த சர்வீஸ் லேன் துவக்கத்தை சரியாக கவனிக்காமல் கடந்துவிடுவார்கள். சரியாக அந்த சர்வீஸ் லேன் என்ட்ரியைத் தாண்டியவுடன் பிரேக் போட்டு நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ரிவர்ஸ் எடுத்து அந்த சர்வீஸ் லேனுக்குள் நுழைய திட்டமிடுவார்கள்நினைத்துப்பாருங்கள். நட்ட நடு நான்குவழிச்சாலையில் நம்முடைய லேனில் ரீவர்ஸில் வந்துகொண்டிருக்கும் வாகனத்தை எதிர்பார்க்கவா முடியும்? எனவே, நகரங்களுக்கு வெளியே இருக்கும் பைபாஸ் நெடுஞ்சாலைகளில் கவனம் தேவை. 

11.
கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையாக ஓட்டவேண்டும். தீடீர், தீடீரென்று டிராக்டரோ, குழந்தைகளோ, மனிதர்களோ சாலையைக் கடப்பார்கள். இவர்களையும் நம்மால் குற்றம் சொல்லமுடியாது. காலம் காலமாக அவர்கள் புழங்கிய பகுதிகளில் தீடீரென்று நான்குவழிச்சாலையைப் போட்டுவிட்டு சாலையைக் கடக்காதீர்கள் என்று சொன்னால் அவர்களுக்குக் கஷ்டமாகத்தானே இருக்கும். ஒரு மாட்டுவண்டி சாலையைக் கடக்கவேண்டும் என்றால் கூட அந்த நெடுஞ்சாலையில் அடுத்த எங்கு க்ராஸ் செய்யக்கூடிய இன்டர்செக்ஷன் இருக்கிறதோ அங்கு சென்றுதான் கடந்தாக வேண்டும். உச்சி வெயிலில் மாட்டு வண்டியை இயக்குபவர் சாலையைக் கடக்க கிலோ மீட்டர் கணக்காக சுற்றிக்கொண்டா வந்து கொண்டிருப்பார். எனவே, திடீரென்று சாலையைக் கடக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபப்படாமல், அவர்களுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு கார் ஓட்டுங்கள். 

12.
கனரக வாகன டிரைவர்களை எப்போதும் கடுப்பேற்றும்படி கார் ஓட்டவே கூடாது. சில சமயம், ஒரு கனரக வாகனத்தை, இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்துகொண்டிருக்கும். சில கார்/ வேன் டிரைவர்கள் அவர்களுக்கு அருகில் சென்று ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் கனரக் வாகன டிரைவர்களுக்கு ஒரே ஒருவழிதான். சற்று பிரேக் செய்து உங்களுக்கு வழிவிடுவது. ஆனால், கனரக வாகனங்கள் வேகம் குறைந்தவுடன் மீண்டும் பழைய வேகத்துக்கு வர அதிக நேரமாகும், டீசலும் விரையமாகும். எனவே அவர்கள் முடிந்தவரை வேகமாக ஓவர்டேக் செய்துவிட்டுத்தான் நமக்கு வழிவிடுவார்கள். அவர்களுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டுதான் நாம் கார் ஓட்டவேண்டும். அப்படியும். பொறுமையில்லாமல் சாலையின் இடதுபுறம் கடைசி லேனில் இருந்து கீழிறங்கி ஓவர்டேக் செய்யும் கார் டிரைவர்களையும் நாம் பார்க்கிறோம். 

13.
இது கேட்க ஒருமாதிரி இருந்தாலும், உண்மையில் சிறப்பான உத்தி. சாலையில் உங்களைத்தவிர மற்ற யாருக்குமே சரியாக வாகனம் இயக்கத் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படி நினைத்துக்கொள்வதால் அடுத்து என்ன நடக்கும்? முன்னே செல்லும் வாகனத்தின் டிரைவர் அடுத்து எந்தப் பக்கம் வளைப்பார்? வளைவுகளில் எதிர்ப்பக்கத்தில் இருந்து வாகனம் வருமா? என்றெல்லாம் 'எதிர்பார்த்து' ஓட்டுவீர்கள். இதனால், உங்களை அறியாமலே, பாதுகாப்பான டிரைவராக மாறுவீர்கள்! 

சாலை விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்குவது நம் அனைவரது 'கை'களில்தான் இருக்கிறது!