Pages

Saturday, August 31, 2019

ஞானிகளின் அருளை பெற வேண்டுமா


அன்பு, ஈகை, இரக்கம், விட்டுக் கொடுப்பது, தியாகம்- என, எவ்வளவு கேள்விப்படுகிறோம். அந்த பாதைகளில், ஏதாவது ஒன்றில், கொஞ்ச துாரமாவது செல்லலாம் என்றால், போன வேகத்தை விட, வெகு வேகமாகத் திரும்ப வேண்டியதாகிறது. 

அரசர் ஒருவர் செய்ததைப் பார்க்கலாம். ஏதாவது விடை கிடைக்கும்... 
ஜானசுருதி என்ற அரசர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். வழிப்போக்கர்கள் தங்கி, உணவுண்டு, இளைப்பாறி செல்ல, அறச்சாலைகள்; வேத- சாஸ்திர- கலைகளை பயிற்றுவிக்க, கல்விச் சாலைகள் என, அரசர், செய்தவை ஏராளம்.
அவரின் அறப்பண்பை பாராட்ட நினைத்த தேவர்கள் இருவர், அன்னப் பறவைகளாக மாறி, உப்பரிகையின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த, அரசருக்கு எதிரில் பறந்தனர். 
அதில் ஒரு அன்னப் பறவை, 'இங்கே, அரசர், ஜானசுருதி உட்கார்ந்திருக்கிறார். அவர் மேல் உன் நிழல் படாதபடி, ஒதுங்கி வா... மிகுந்த தர்மவானான அவர் மேல், உன் நிழல் பட்டால் எரிந்து விடுவாய்...' என்றது. 
அதைக் கேட்ட, மற்றொரு அன்னம், 'அப்படியா... இருக்கட்டும்... ஆனால், இந்த அரசரை விட, எல்லையில், ரைக்வர் எனும் வண்டிக்காரர் இருக்கிறார்; அவருக்கு உள்ள மகிமை, நீ சொல்லும் அரசர், ஜானசுருதிக்கு வராது...' என்றது.
'என்ன... ஒரு சாதாரண வண்டிக்காரருக்கு அவ்வளவு மகிமையா...' என்றது, முதல் அன்னம்.
'மகா புண்ணியசாலி, அவர். பிரம்ம ஞானியான அவருக்கு, ஈடு சொல்ல முடியுமா என்ன...' என்றது, இரண்டாம் அன்னம். 
கேட்டுக் கொண்டிருந்த அரசரின் மனம், அலை பாய்ந்தது. அந்த மகான், ரைக்வரை உடனே பார்க்க எண்ணினார்.
'ரைக்வரை தேடி, தகவலறிந்து வாருங்கள்...' என, ஆட்களை அனுப்பினார். 
அவர்களும், அங்கு இங்கு என்று தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்தனர். தகவலறிந்த அரசர், பசுக்கள்-, பொன்மாலை,- தங்கக் காசுகள் என, பலவற்றையும் ஏராளமாக எடுத்து போய், ரைக்வரிடம் சமர்ப்பித்தார்.
'சுவாமி... தாங்கள் ஆராதனை செய்து வரும், தெய்வ ஸ்வரூபத்தை, அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும். தங்கள் திருவாக்கால், மெய் ஞானத்தையும் உணர விரும்புகிறேன்...' என்று வேண்டினார். 
ரைக்வரோ, 'திட மனது இல்லாத அரசே... இந்த குப்பைகளை எல்லாம் எடுத்து, வந்த வழியாக திரும்பிப் போ...' என்றாரே தவிர, அரசரின் காணிக்கைளை, கண் திறந்து பார்க்கவில்லை.
மறுநாள், மேலும் பல காணிக்கை பொருட்களுடன் போய் பார்த்து, எண்ணம் பலிக்காமல் திரும்பினார், அரசர்.
அடுத்த நாள், காணிக்கை பொருட்களோடு, பரிவாரங்களையும், தன் மகளையும் அழைத்து போனார், அரசர். 
'ஞானியே... அடியேன் குமாரியை, தங்கள் துணையாக, -பத்தினியாக ஏற்று, அடியேனின் ஞான வேட்கையைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்...' என, வேண்டினார்.
ஞானியோ, எதையும், யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை; பதிலும் பேசவில்லை. அரசருக்கு உண்மை புரிந்தது. 
'துறவிக்கு, வேந்தனும் துரும்பு. இதை அறியாமல், மேலும் மேலும் செல்வத்தை காட்டி, இவரிடம் இருந்து, மெய்ஞானத்தைப் பெற்று விடலாம் என்று நினைத்தது, எவ்வளவு பெரிய தவறு...' என்று எண்ணினார், அரசர்; தான் எடுத்து வந்த அனைத்தையும், திருப்பி அனுப்பினார். 
அது மட்டுமல்ல, தன் ராஜ உடைகளை களைந்து, எளிய உடைகளை அணிந்து, ஞானியின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். 
அரசருக்கு உபதேசித்து, அவரை வாழ்வின் நற்பயன் பெறச் செய்தார், மகா ஞானியான ரைக்வர்.
ஞானிகளின் அருளைப் பெற வேண்டுமானால், அவர்கள் பாதையில் நாம் போக வேண்டும், என்பதை விளக்குகிறது. இதிகாசங்களிலும் உபநிடதங்களிலும் பிரபலமானது, இக்கதை.

பி.என். பரசுராமன்

No comments:

Post a Comment