Pages

Friday, April 5, 2013

ஆன்மிக சிந்தனைகள் »சத்யசாய்


தடைகளின் போது தைரியம் தேவை
* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாக இல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.
*
இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.
*
ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில், ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.
*
குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.
*
வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது. மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள். 

நடப்பதெல்லாம் நன்மை!
* உலகில் பெறுவதற்கு அரிய செல்வம் கடவுளின் அருள் மட்டுமே. கண்ணை இமை காப்பது போல கடவுள் காப்பாற்றுகிறார் என்ற உறுதி மிக்கவன் இச்செல்வத்தைப் பெறுகிறான்.
*
அன்பே சிவம். சிவமே அன்பு. ஆழ்ந்த அன்புடன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். பிறருக்குத் தொண்டாற்றுங்கள். அதுவே உயரிய வழிபாடு.
*
உள்ளத்திலுள்ள மிருக உணர்ச்சிகளைக் களைந்தெறியுங்கள். தெய்வீக உணர்ச்சி பெருக்கெடுப்பதைக் காண்பீர்கள்.
*
காதுகள் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கட்டும். கண்கள் நற்செயல்களை மட்டுமே காணும் பேறு பெறட்டும்.
*
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கிறது என்ற உறுதியாக நம்புங்கள்.
*
மனம் என்னும் தோட்டத்தில் வீண்பரபரப்பு, அறியாமை, பயம், பேராசை போன்ற விஷச்செடிகள் வளர்வதற்கு இடம் கொடுக்காதீர்கள். 

தகுதியானவர்க்கு தானம்
* "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வுகள் காணாமல் மறைந்து விடும்.
*
யாரையும், இழிவாக நினைப்பது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை இகழ்ந்த பாவம் நம்மைச் சேர்ந்துவிடும்.
*
தினமும் தியானம் செய்ய ஏற்ற நேரம் அதிகாலை பிரம்மமுகூர்த்தம். அந்தவேளையில் கண் விழிப்பவர்கள் வாழ்வு நலமாக அமையும்.
*
கடவுளின் ஆற்றல் மின்சக்தி போன்றது. நாம் பல்பு போன்றவர்கள். உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொறுத்து, ஒளி வெளிப்படுகிறது.
*
சம்பாதிப்பதில் ஒருபகுதியை எதிர்காலம் கருதி சேமிப்பது போல, ஏழை எளியவர்க்கு தர்மம் செய்வதும் கடமை.
*
பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புபவர்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
*
கண்களால் காண்பதாக தவறாக கற்பனை செய்கிறோம். ஆனால்,<< உண்மையில் கடவுளின் கண்களால் தான் நாம் இந்த உலகையே காண்கிறோம்.

பணியே நிஜமான தியானம்
* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் இவற்றை செயல்படுத்துங்கள்.
*
காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்யுங்கள்.
*
கடவுளையே லட்சியமாக சுவாசியுங்கள். அவருக்குள் ஆழ்ந்து விடுங்கள்.
*
மவுனமாக கண்மூடி அமர்ந்திருப்பதல்ல தியானம். உணர்வால் கடவுளிடம் ஒன்றுவதே நிஜமான தியானம்.
*
உங்கள் பணியை தியானம் போல் மனம் ஒன்றிச் செய்யுங்கள். அது தான் உயர்ந்த தியானம்.
*
முதலில் கடவுள், இரண்டாவது உலகம், கடைசியாக நான். இந்த வரிசையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்க வேண்டும்.
*
வேண்டுவது அனைத்தையும் கடவுள் வழங்குவார். எனவே, சரியானதைக் கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.

இணைபிரியாத நண்பர்கள்
* நம் வாழ்வை திட்டமிட்டு நாமே அமைத்து கொள்ள வேண்டும். பிறர் அபிப்ராயத்திற்காக வாழ்வது கூடாது.
* மனித இதயத்தில் ஆசை, கோபம் போன்ற பெருந்தீ எரிந்து கொண்டு இருக்கிறது. இதனை நெறிப்படுத்தாவிட்டால் மனித சமூகமே அழிந்து விடும்.
*
சிறுகல்லைக் கூட கடவுள் நிலைக்கு உயர்த்த முடியும். ஆனால், கடவுளைக் கல்லாக கீழே கொண்டு வருவது கூடாது.
*
நமக்குத் தேவையானதை வழங்க கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால், அதை பெறுவதற்கு நம்மை இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
*
இளமையிலேயே நா ருசியைக் கட்டுப்படுத்துவது நல்லது. இதனால், நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழமுடியும்.
*
துன்பத்திலும் இன்பத்தைக் காண்பவனே சிறந்தவன். அத்தகையவனைக் கடவுளுக்கு நிகராக ஒப்பிடலாம்.
*
அமைதியும், ஆனந்தமும் இணைபிரியாத நண்பர்கள். தியானத்தின் மூலம் இவர்களின் நட்பைப் பெற முடியும்.

செலவழிக்காமலே கரையும்
* உண்மையாயிருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அதை அதிகப்படுத்தியோ, குறைத்தோ திரித்துக் கூறாதீர்கள்.
*
மனதில் எப்போதும் நல்ல சிந்தனை மட்டும் இருக்கட்டும். அதனால், உங்களைச் சுற்றி எப்போதும் தெய்வ மணம் பரவிக் கொண்டே இருக்கும்.
*
மனிதர்கள் உலகைப் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதை விட தங்களின் உடல், மனம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
*
உலகம் என்பது இன்பதுன்பம், வெற்றிதோல்வி என இரண்டின் கலப்பாகவே இயங்குகிறது.
*
செலவழித்தால் தான் செல்வம் கரையும். ஆனால், நம்முடைய வாழ்நாள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் குறைந்து கொண்டே போகும்.
*
தேவைகளைக் குறையுங்கள். ஆசைகளைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இதுவே நிம்மதிக்கு வழி.
*
தலைக்கு மேல் சூரியன் பிரகாசிக்கும்போது நிழல் விழுவதில்லை. அதுபோல, உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை எழும் போது சந்தேக நிழல் படிவதில்லை.

நல்லதை மட்டுமே காண்போம்
* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம்.
*
மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும்.
*
நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள்.
*
பூமிப்பந்தில் பாதி இருட்டாகவும், பாதி ஒளியாகவும் இருப்பது போல, வாழ்விலும் இன்ப, துன்பம் சரி பாதியாக கலந்திருக்கிறது.
*
வாழ்க்கை என்பது ஒரே திசையில் செல்லும் நீரோட்டம். அதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.
*
ஜபம், தியானம், பஜனை போன்றவை விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள். அவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை அடைய முயலுங்கள்.
*
நமக்கு எது தேவையோ அதைத் தர கடவுள் தயாராக இருக்கிறார். ஆனால், அதைப் பெறும் தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியம்.

நல்லதையே தேர்ந்தெடுங்கள்
* தேடிய செல்வத்தால் வாழ்வு வளம் பெறும். சேர்த்து வைத்த புண்ணியம் வாழ்விற்கு பாதுகாப்பு தரும்.
*
உலகில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நீங்கள் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
*
தனிமனிதனின் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. அதனால், ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழ கடமைப்பட்டிருக்கிறான்.
*
ஏட்டுப்படிப்பை பெறுவது கல்வியாகாது. ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு ஞானத்தை அடைவதே உயர்ந்த கல்வி.
*
அன்பு, நல்லொழுக்கம், உயிர்களிடம் கருணை ஆகிய குணங்களைக் கொண்ட மனிதன் சொர்க்கத்தில் வாழும் பேறு பெறுகிறான்.
*
கல்லிலே கடவுளைக் காண முயற்சிக்க வேண்டுமே ஒழிய, கடவுளைக் கல்லாக்க முயற்சிக்கக் கூடாது.
*
சரியான டிக்கெட்டும், ரயிலும் கிடைத்து விட்டால் ஊர் போய்ச் சேரலாம். தெளிந்த அறிவும், சாஸ்திர ஞானமும் இருந்து விட்டால் லட்சியத்தை அடையலாம்.

கடமையில் கண்ணாயிருங்கள்!
* காற்றை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அதுபோல ஆன்மிக காற்றும் உலகெங்கும் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.
*
கடவுள் நமக்குரியவர் என்று நினைப்பதை விட நாம் கடவுளுக்குரியவர் என்று சிந்திப்பது உயர்வானது.
*
பஜனையில் பாடிக் கொண்டிருப்பது மட்டுமே பக்தியாகாது. உள்ளத்திலும், நடத்தையிலும் உண்மையும், தூய்மையும் வெளிப்படுவதே பக்தியின் இலக்கணம்.
*
வெற்றியோ, தோல்வியோ நமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு கடமையில் முழுமையாக ஈடுபடுங்கள்.
*
கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற மலைப்பாம்புகளின் பிடியில் மனிதன் சிக்கித் தவிக்கிறான்.
*
கடவுளைச் சரணடைந்து விட்டால், அவரருளை எளிதாகப் பெறலாம்.
-
 சாய்பாபா

No comments:

Post a Comment